இப்படியொரு வலிமையான கட்சியை பார்த்ததே இல்லை; பா.ஜ.,வை சொல்கிறார் சிதம்பரம்

42


புதுடில்லி: இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம், பா.ஜ., சிறந்த கட்டமைப்புடன் இருப்பதாக பாராட்டியுள்ளார்.


காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவான சல்மான் குர்ஷித் எழுதிய 'போட்டியிடுவதில் ஜனநாயகப் பற்றாக்குறை' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது, இண்டி கூட்டணி மற்றும் ஆளும் பா.ஜ., குறித்து அவர் கூறியது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அவர் கூறியதாவது; மிருதுஞ்சய் சிங் யாதவ் கூறுவது போல் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. இண்டி கூட்டணி இன்னும் ஒற்றுமையாக உள்ளது என்று அவர் நினைப்பதாகத் தெரிகிறது. ஆனால், அது எனக்கு உறுதியாக தெரியவில்லை. இண்டி கூட்டணியின் பேச்சுவார்த்தை குழுவில் சல்மான் குர்ஷித் இருப்பதால், அவர் இதற்கு பதிலளிக்கலாம்.


இண்டி கூட்டணி இன்னமும் ஒற்றுமையாக இருந்தால் நான் மகிழ்ச்சியடைவேன். ஆனால், அது பலவீனமாக இருப்பது தெரிகிறது. நமக்கு இன்னமும் காலம் இருக்கிறது. இண்டி கூட்டணியை மீண்டும் ஒருங்கிணைக்கலாம்.


அதேவேளையில், பா.ஜ., மிகவும் வலிமையாக உள்ளது. என்னுடைய அனுபவத்திலும் சரி, வரலாற்றை படித்து தெரிந்ததிலும் சரி, பா.ஜ., போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் நான் பார்த்ததில்லை. அனைத்துத் துறைகளிலும் வலிமையாக இருக்கிறார்கள். இது மற்றும் ஒரு சாதாரண கட்சியல்ல, இவ்வாறு கூறினார்.


ப.சிதம்பரம் பேசிய இந்த வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த பா.ஜ.,வின் பிரதீப் பண்டாரி, " காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்பது, ராகுலுக்கு நெருக்கமாக இருக்கும் தலைவர்களுக்கு கூட தெரிந்துள்ளது," என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement