பா.ஜ., கூட்டணிக்கு வாய்ப்பில்லை: த.வெ.க., நிர்மல்குமார் உறுதி

சென்னை : த.வெ.க., துணை பொதுச்செயலர் நிர்மல்குமார் அளித்த பேட்டி:

வக்ப் திருத்த சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. இதில், த.வெ.க., தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய, தி.மு.க., அரசு இதை கண்டு கொள்ளவில்லை. தீர்மானம் போட்டு, வீட்டில் வைத்துக் கொண்டால் எதுவும் நடக்காது. வழக்கில், தமிழக அரசு தன்னை இணைத்துக் கொண்டிருக்க வேண்டும். எல்லா விஷயத்திலும் மக்களை ஏமாற்றுவது போல், இந்த விஷயத்திலும் தி.மு.க., நாடகமாடி ஏமாற்றுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டு தி.மு.க.,வினர் பயப்படுகின்றனர்.

கவர்னர் ரவியை மிகப்பெரிய எதிரிபோல் சித்தரித்து, போராட்டம் நடத்துகின்றனர். கட்சியின் முதல் மாநாட்டிலேயே, பா.ஜ., எங்கள் கொள்கை எதிரி என தலைவர் விஜய் அறிவித்து விட்டார். எனவே, அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை.

இவ்வாறு கூறினார்.

Advertisement