'இந்தியா - பாக்., உறவு இருதரப்பு ரீதியிலானது மட்டுமே'

புதுடில்லி: ''பாகிஸ்தான் உடனான இந்தியாவின் உறவுகள் மற்றும் பரிவர்த்தனைகள் கண்டிப்பாக இருதரப்பு ரீதியில் மட்டுமே இருக்கும்,'' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

இந்தியா - பாக்., உறவு குறித்து எனக்கு தெளிவான பார்வை உள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்தியாவை பொறுத்தவரை பாகிஸ்தான் உடனான உறவு இருதரப்பு ரீதியிலானது. கண்டிப்பாக இருதரப்பு மட்டுமே. அதில் மாற்றமில்லை.

இது பல ஆண்டுகளாக உள்ள தேசிய ஒருமித்த கருத்து; அது என்றைக்கும் மாறாது.

பாக்., உடனான பேச்சு, பயங்கரவாதம் தொடர்பானதாக மட்டுமே இருக்கும் என்பதை பிரதமர் தெளிவுபடுத்தி விட்டார்.

பாக்.,கில் உள்ள பயங்கரவாத முகாம்களை அந்நாட்டு அரசு மூட வேண்டும். அங்குள்ள பயங்கரவாதிகளை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதில் என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

காஷ்மீர் பற்றி விவாதிக்கப்பட வேண்டிய ஒரே விஷயம், பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய பகுதியை அவர்கள் விடுவிப்பது மட்டுமே. அதுகுறித்து அவர்களுடன் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியா - பாக்., விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை என்பதைத் தான் அமைச்சர் ஜெய்சங்கர் மறைமுகமாக சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.

Advertisement