ஜாபர் சேட்டுக்கு எதிரான ஈ.டி., வழக்கு ரத்து

9

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட்டுக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

கடந்த 2006 - 11ல், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011ல் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் ஜாபர் சேட் மீது அமலாக்கத்துறை கடந்த, 2020ல் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

பின்னர் சில விளக்கங்களை பெறுவதற்காக வழக்கு மீண்டும் பட்டியலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்து அமலாக்கத்துறை வாதம் முடிந்த பின் அன்றைய தினமே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கு எதிராக ஜாபர் சேட் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்து இருந்த உச்ச நீதிமன்றம், ஜாபர் சேட்டுக்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்கவோ அல்லது தீர்ப்பு வழங்கவோ கூடாது என்று இடைக்கால தடை விதித்ததோடு, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கும் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'இந்த விவகாரத்தில் வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதிமன்றம் கூறிவிட்டு, வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்து நடத்தியதை ஏற்க முடியாது.


எனவே ஜாபர் சேட் விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது. இந்த விவகாரத்தில் ஏதேனும் விளக்கம் தேவை என்றால் அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தை அணுகலாம்' என உத்தரவிட்டது

-டில்லி சிறப்பு நிருபர்-.

Advertisement