ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்: சோடங்கருக்கு காங்கிரசார் அழுத்தம்

3

தி.மு.க.,வுடன் கூட்டணி உடன்பாடு செய்வதற்கு முன், ஆட்சியில் பங்கு குறித்து பேச வேண்டும்' என, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரிடம், தமிழக காங்., நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில், இரண்டாவது நாளாக நேற்று, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் இல.பாஸ்கரன் கூறியுள்ளதாவது:

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கும், அ.தி.மு.க., கூட்டணிக்கும், ஒன்றரை சதவீதம் தான் ஓட்டு வித்தியாசம். வலுவான கூட்டணி அமைந்தால் தான் தி.மு.க.,வால் ஆட்சி அமைக்க முடியும்.

தமிழகத்தில் காங்கிரஸ் இனி, அரசியல் செய்ய வேண்டும் என்றால், அதிகார பகிர்வு வேண்டும். அதனால், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும்.

தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தும்போது, ஆட்சியில் பங்கு குறித்து உறுதி செய்த பின்னரே, ஒப்பந்தம் செய்ய வேண்டும். இது அடிமட்ட தொண்டர்களின் கருத்து. தொண்டர்களின் மன உணர்வை ராகுலிடம் கிரிஷ் சோடங்கர் தான் வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

நேற்று முன்தினம் கிரிஷ் சோடங்கர் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு, 24 துணை அமைப்புகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டது.

மகளிர் அணி தலைவி ஹசீனா சையது, மாணவரணி தலைவர் சின்னதம்பி உட்பட, 20 அணிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், மீனவர் அணி தலைவர் ஜோர்தான், விவசாய அணி தலைவர் பவன்குமார் உட்பட, 4 பேர் மட்டும் பங்கேற்கவில்லை.




- நமது நிருபர் -

Advertisement