கல்விக்கடனுக்கும் தேவை 'சிபில்' ஸ்கோர்! பெற்றோர் இதை நன்றாக கவனிக்கணும்

பொள்ளாச்சி : கல்விக்கடன் பெற உள்ள மாணவர்களே... உங்கள் பெற்றோரின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், உங்களுக்கு கல்விக்கடன் கிடைக்காமல் போகும் நிலையுள்ளது.

கல்வி நிறுவனங்களில் படிக்க இடம் கிடைத்தும், போதியளவில் பணம் இல்லாத காரணத்தினால் மாணவர்கள் படிப்பை விட்டு விடக் கூடாது என்பதற்காக, வங்கிகள் வாயிலாக, மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை, மத்திய அரசுசெயல்படுத்தி வருகிறது.

கல்விக்கடனுக்கு, 'வித்யாலட்சுமி போர்ட்டல்' வாயிலாக, உரிய ஆவணங்களுடன், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனத்தில் அட்மிஷன் பெறுவதற்கு முன்பாக, கல்விக் கடன் பெற விண்ணப்பிக்க முடியாது.

வங்கிகளில் கல்விக் கடன் பெறுவதற்கு முன்னதாக அங்கீகரிக்கப்பட்டக் கல்வி நிறுவனத்தில் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவில் அட்மிஷன் வாங்கியிருக்க வேண்டும் என்பன போன்ற விதிமுறைகள் உள்ளன.

படிப்பை முடித்த ஓராண்டிலிருந்து அல்லது வேலைக்கு சென்று, 6 மாதங்களிலிருந்து கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த துவங்க வேண்டும். ஆனால், கல்விக்கடன் பெறுவதிலும் சில சிக்கல்கள் உள்ளன. இதிலும், 'சிபில்' ஸ்கோர் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மாணவர்களின் பெற்றோரின் 'சிபில்' ஸ்கோர் 700க்கு மேல் இருந்தால் தான், கல்விக்கடன் கிடைக்கக் கூடிய வாய்ப்புள்ளது.

'சிபில்' ஸ்கோர் என்பது 300 முதல் 900 வரையிலான கணக்கீட்டை கொண்டது. 'சிபில்' ஸ்கோரை அதிகமாக வைத்திருந்தால் எளிதாகவும் கடன் கிடைக்கும். வட்டி குறையும் வாய்ப்புள்ளது. 700 அல்லது அதற்கும் மேல் 'சிபில்' ஸ்கோர் இருந்தால், வங்கிகள் கடன் வழங்க தயங்காது.

பெற்றோரின் 'சிபில்' ஸ்கோர் 700க்கு கீழ் இருக்கும் பட்சத்தில், அவர்களின் குழந்தைகளுக்கு கல்விக்கடன் கிடைக்க வாய்ப்பில்லை என, வங்கியாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இதுபோன்ற விதிமுறையால், நன்றாக படிக்கக் கூடிய மாணவர் ஒருவருக்கு கல்விக்கடன் தேவை எனும் போது, அவரின் பெற்றோரின் 'சிபில்' ஸ்கோர், 700க்கும் குறைவாக இருந்தால், குறிப்பிட்ட மாணவருக்கு கல்விக்கடன் கிடைக்காமல் போகுமானால், அவரின் படிப்பை எப்படி தொடர முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, இந்த விதிமுறையைசற்று தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Advertisement