வனத்துறை அலுவலகம் முன் திடீர் போராட்டம் பேச்சுவார்த்தை நடத்திய டி.எப்.ஓ.,

கூடலுார் : கூடலுார் பால்மேடு அருகே, 60 மீட்டர் துார் சாலை அமைக்க அனுமதி கோரி, எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், டி.எப்.ஓ., அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

கூடலுார் பால்மேடு பகுதியில், 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதிக்கு கோழிக்கோடு சாலையில் இருந்து, 60 மீட்டர் துாரம் மண் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையை சீரமைக்க, எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், 5 லட்சம் நிதி ஒதுக்கினார்.

அந்த சாலை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வருவதாக கூறி வனத்துறையினர் பணிகள் மேற்கொள்ள அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், 'சாலையை சீரமைக்க அனுமதி வழங்க வேண்டும்; ஆமைக்குளம்-கோழிக்கொல்லி சாலையில் ஆற்றின் குறுக்கே, 4 அடி பாலத்துக்கு மாற்றாக, வாகனங்கள் சென்று வரும் வகையில் பாலம் அமைக்க அனுமதி தர வேண்டும்,' என, வலியுறுத்தி, எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் தலைமையில் அப்பகுதியினர், நேற்று காலை கூடலுார் டி.எப்.ஓ., அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், டி.எப்.ஓ., வெங்கடேஷ்பிரபு மற்றும் வன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, 'அப்பகுதியில் தனிநபர் ஒருவர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளார். அதனை, 14 நாட்களுக்குள் அகற்றி, சாலை சீரமைக்க அனுமதிக்க வழங்கப்படும். இதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்,' என, டி.எப்.,ஓ., தெரிவித்தார்.

அதனை ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர். பிரச்னை குறித்து கேட்டறிந்து, கூடலுார் தாசில்தார் முத்துமாரி, 'குறிப்பிட்ட இடத்தை, இன்றே (நேற்று) சர்வே செய்து, அதன் அடிப்படையில் சாலை அமைப்பது குறித்து முடிவு செய்யலாம்,' என, தெரிவித்தார்.

அதனை ஏற்று மதியம், 1:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர்.

Advertisement