13 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை

1

சென்னை: 'தமிழகத்தில், 13 மாவட்டங்களில், இன்றும், நாளையும் கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் நேற்று காலை, 8:00 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், சிவகங்கையில், 9 செ.மீ., மதுரையில், 7 செ.மீ., கரூர் மாவட்டம் ஆனைப்பாளையம், திருப்பத்துார் மாவட்டம் வடபுதுப்பட்டில் தலா 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில், சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும், இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான மழை பெய்யலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று அதிகபட்சமாக, ஈரோட்டில், 40.2 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், வேலுார், தஞ்சாவூர், திருத்தணி, கடலுார் பகுதியில், 100 டிகிரிக்கு மேலான வெப்பமும் பதிவானது.

Advertisement