கொசுவலை முறைகேடு சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவு

மதுரை: கொசுவலை கொள்முதல் செய்து ஜார்கண்ட் மாநில அரசுக்கு வினியோகித்த நிறுவனம், 'ஷெல்' கம்பெனிகள் வாயிலாக குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக தாக்கலான வழக்கில், சி.பி.ஐ., விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

கரூர், எச்.டி.பி.இ., பிலமென்ட் மற்றும் பெட்நெட்ஸ் உற்பத்தியாளர்கள் நலச்சங்க தலைவர் மலையப்பசாமி தாக்கல் செய்த மனு:

கொசு வலைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். ஜார்கண்ட் அரசு பொது பயன்பாட்டிற்காக கொசு வலை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை வெளியிட்டது. அம்மாநில அரசு மற்றும் மத்திய மருத்துவ ஆய்வு சேவைகள் சங்கத்திற்கும், கொசு வலைகளை வினியோகிப்பதற்காக ஒரு நிறுவனம் ஒப்பந்த பணியை பெற்றது.

அந்நிறுவனம், எவ்விதமான வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடாத பெயரளவிலான சில கம்பெனிகளிடம் 84 மற்றும் 145 ரூபாய்க்கு குறைந்த விலைக்கு கொசு வலைகளை கொள்முதல் செய்தது. அவற்றை ஜார்கண்ட் அரசு மற்றும் சி.எம்.எஸ்.எஸ்., ஆகியவற்றிற்கு 290 ரூபாய்க்கு விற்பனை செய்தது. அந்நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. டில்லி சி.பி.ஐ., எஸ்.பி.,க்கு புகார் அனுப்பினேன். விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரின் புகாரில் முகாந்திரம் உள்ளதை சி.பி.ஐ., தாக்கல் செய்த இடைக்கால அறிக்கை வெளிப்படுத்துகிறது. சி.பி.ஐ., எஸ்.பி., இயன்றவரை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

Advertisement