ஓசூரில் பாகலுார் சாலை பணிகள் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

ஓசூர்: ஓசூரிலுள்ள பாகலுார் சாலை புதிதாக அமைக்கப்படுவதால், போக்குவரத்து மாற்றியமைக்கப் படுவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூரிலுள்ள பாகலுார் சாலையை, கே.சி.சி., நகர் வரை, 2 கி.மீ., துாரம் புதிதாக அமைக்கும் பணிகள் நாளை (மே 19) துவங்க உள்ளது. இச்சாலை வழியாக, ஓசூர் மாநகராட்சி அலுவலகம், பாகலுார் மற்றும் கர்நாடகா மாநிலம், மாலுாருக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. நாளை (மே 19) முதல் இச்சாலையில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படாமல் போக்குவரத்து மாற்றியமைக்கப்படுகிறது.கிருஷ்ணகிரி அல்லது ஓசூரில் இருந்து மாலுார் செல்ல வேண்டிய கனரக வாகனங்கள், பேரண்டப்பள்ளி சென்று, அங்கிருந்து அத்திமுகம் - பேரிகை செல்லும் சாலை வழியாக செல்ல வேண்டும். மாலுாரில் இருந்து ஓசூர் வரும் கனரக வாகனங்கள், அதே வழியில் வர வேண்டும். கர்நாடகாவின் சர்ஜாபுரம் செல்ல வேண்டிய வாகனங்கள், ஓசூர் இன்னர் ரிங்ரோட்டில் சென்று, கர்நாடகாவின் எல்லையான அத்திப்பள்ளி வழியாக செல்ல வேண்டும். அங்கிருந்து வரும் வாகனங்கள், அத்திப்பள்ளி வழியாக வர வேண்டும்.
இருசக்கர மற்றும் இலகுரக வாகனங்கள், பாகலுார் சாலையை வழக்கம் போல் பயன்படுத்தி கொள்ளலாம். ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதனால் பாகலுாரில் இருந்து வரும் வாகனங்கள், கே.சி.சி., நகர் சாலை மற்றும் பஸ்தி ஆவல்நத்தம் சாலை வழியாக ஓசூர் நகருக்குள் வர வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement