பாதுகாப்பு அனுமதி ரத்து செய்ததை எதிர்த்து துருக்கி நிறுவனம் வழக்கு: ஐகோர்ட்டில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு

7

புதுடில்லி: சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் பாதுகாப்பு அனுமதியை, ரத்து செய்த முடிவை எதிர்த்து துருக்கியின் 'ஸெலெபி ஏவியேஷன்' நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவிற்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, நம் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தபோது, பாக்.,குக்கு ஆதரவாக, ட்ரோன்கள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான ஆட்களை, மேற்கு ஆசிய நாடான துருக்கி வழங்கியது. பாக்., ஆதரவு நிலைப்பாட்டால், அந்த நாட்டுடன் அனைத்து உறவுகளையும் நம் நாடு துண்டித்து வருகிறது.

அதன்படி, துருக்கியின் 'ஸெலெபி ஏவியேஷன்' நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும், நம் சிவில் விமான போக்குவரத்து துறையின், 'சிவில் விமான பாதுகாப்பு பணியகம்' அதிரடியாக ரத்து செய்தது.

இந்தியாவில் ஒன்பது விமான நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் பயணியர் சேவை பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை, சட்ட ரீதியாக எதிர்கொள்ளப் போவதாக, துருக்கியின் ஸெலெபி ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அனுமதியை, ரத்து செய்த முடிவை எதிர்த்து துருக்கியின்
'ஸெலெபி ஏவியேஷன்' நிறுவனம் டில்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவிற்கு, மத்திய அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

நீதிபதி சச்சின் தத்தா முன் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "தேசிய பாதுகாப்பு நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது" என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கு மீதான விசாரணையை மே 21ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement