மோட்டார் வைத்து சாயக்கழிவுநீர் வெளியேற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி

1

பள்ளிப்பாளையம்: ஆவத்திபாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலையில் இருந்து மோட்டார் வைத்து சாயக்கழிவு நீரை வெளியேற்றுவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே ஆவத்திபாளையம் பகுதியில் செயல்படும் சாய ஆலையில் இருந்து விதிமீறி சாயக்கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். சாயக்கழிவுநீர் நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் தண்ணீர் மாசடைகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களுக்கு கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சாய ஆலைகளில் இருந்து சாயக்கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவது குறித்து, அப்பகுதி மக்கள், குமாரபாளையம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆவத்திபாளையம் பகுதியில் செயல்படும் ஒரு சாய ஆலையில், சாயக்கழிவு
நீரை ஒரு பெரிய தொட்டியில் திறந்து விடுகின்றனர். பின், அந்த தொட்டியில் இருக்கும் சாயக்கழிவுநீரை, மோட்டார் மூலம் வெளியேற்றுகின்றனர். இதை, அந்த சாய ஆலையின் அருகே வசிக்கும் ஒருவர், வீட்டின் மேல் மாடியில் இருந்து வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ, 'வாட்ஸாப்'பில் பரவி வருகிறது. இதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட சாய ஆலை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பதிவிட்டுள்ளனர்.

Advertisement