குவாரியில் கற்கள் சரிந்து விபத்து; தொழிலாளர் 5 பேர் பலி

2


சிவகங்கை: சிவகங்கையில் கல்குவாரியில் கற்கள் சரிந்து தொழிலாளிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு வெளியில் இருந்து கொண்டு வரும் கற்களை கொண்டு எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுகிறது.



குவாரி உள்ளேயும், பெரிய பள்ளம் தோண்டப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. குவாரிப்பள்ளத்தில் இன்று (மே 20) காலை தொழிலாளர்கள் வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.


அப்போது திடீரென கற்கள் சரிந்து தொழிலாளர்கள் சிக்கினர். 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இரண்டு பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மைக்கேல் என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார்.



உயிரிழந்தவர்கள் கணேஷ், முருகானந்தம், ஆறுமுகம், அர்ஜித், ஆண்டிச்சாமி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement