இட ஒதுக்கீட்டு முறை பலன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: இட ஒதுக்கீட்டு முறையால் சமுதாயங்கள் பெற்ற பலன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தன்னாட்சி உரிமை, மத்திய, மாநில அரசுகளின் உறவுகளை மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைப்பதற்காக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் குழு, 1971ம் ஆண்டு முதல் நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக, பொருளாதார முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
அந்தக் குழு அதன் இடைக்கால அறிக்கையை வரும் ஜனவரி மாதத்திற்குள்ளாகவும், இறுதி அறிக்கையை இரு ஆண்டுகளுக்கு உள்ளாகவும் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளின் ஒரு கட்டமாக 1971ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஏற்பட்ட சமூக,பொருளா தார மாற்றங்கள் குறித்தும் குரியன் குழு ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1969ம் ஆண்டில் சட்ட நாதன் தலைமையில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும், 1982ம் ஆண்டில் அம்பா சங்கர் தலைமையில் அமைக்கப்பட்ட 2வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீடுகள் என்ற நிலையை மாற்ற உள் ஒதுக்கீடுகள் வழங்க பரிந்துரைத்தன. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை.
1989ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு இரண்டாக பிரிக்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பு என்ற புதிய பிரிவு உருவாக்கப்பட்டு, அப்பிரிவுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. பின் 36 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டால் எந்தெந்த சமூகங்களுக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என்பது குறித்த விவரங்கள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இது சமூக நீதிக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.
எனவே, ஆய்வு செய்யவிருக்கும் குரியன் குழு, அதற்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகள் எந்த அளவுக்கு பங்களித்தன என்பது குறித்து ஆராய வேண்டும்.
அதற்கு வசதியாக, தமிழகத்தில் இப்போது வரை நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீடு ஆகியவற்றால் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். அந்த அறிக்கையை நீதியரசர் குரியன் குழுவிடம் வழங்கி ஆய்வுக்கு உட்படுத்துமாறு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
