வக்ப் சட்ட திருத்தம் முஸ்லிம் அமைப்பை கைப்பற்றும் நோக்கமா? சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்

71

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்ட திருத்தத்திற்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அனல் பறக்கும் விவாதம் நடந்தது.
வக்ப் போர்டு சொத்து தொடர்பாக பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்தத்திற்கு எதிராக, காங்கிரஸ், சமாஜ்வாதி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், ஏராளமான முஸ்லிம் அமைப்புகள் என, 100க்கும் அதிகமான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



இந்த மனுக்கள் மீதான விசாரணை, மே 20ம் தேதியான இன்று, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது.


இந்த விவாதத்தில் அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா , 3 பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும் என்றார். மேலும், ''சொத்து யாருக்கு என்பதில் கோர்ட்டால், பயனீட்டாளர்கள், வக்ப் போர்டால் அடையாளப்படுத்தும் சொத்துக்களை அறிவிக்க முடியாத நிலை உள்ளது. வக்ப், கோர்ட், பத்திரம், பயனீட்டாளர்களில் யார் அறிவிக்க முடியும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டிய சூழல் இருக்கிறது'' என்றார்.


மனுதாரர்கள் தரப்பில் கபில்சிபல் வாதிடுகையில், ''இந்த வழக்கை தனித்தனியாக ஒவ்வொரு பிரிவாகவும் விசாரிக்க முடியாது. வக்ப் சட்ட திருத்தத்தின் பின்னணியில் உள்ள யோசனைகள் முழு முஸ்லிம் அமைப்பையும் காப்பாற்றுவது போன்ற கைப்பற்றும் நோக்கம் கொண்டதாகும். நீங்கள் மசூதிக்கு சென்றால் பார்க்கலாம் அங்கு காணிக்கை இல்லை. கோயில்களை போல் ஆயிரக்கணக்கான கோடிகள் இல்லை''.




நானும் சென்றுள்ளேன்:

" ஆமாம் நானும் ஆலயங்கள், மசூதிகள் சென்றிருக்கிறேன், இது அடிக்கடி நடந்திருக்கிறது" என்றார் தலைமை நீதிபதி கவாய்.



எப்போதும் மாற்ற முடியாது




மேலும் கபில்சிபல் வாதிடுகையில் ; நான் மசூதிகள் குறித்து பேசுகிறேன். ஒரு மத நிறுவனத்திற்கு அரசு நிதியளிக்க முடியாது. வக்ப் சொத்துக்களை எந்தவிதமான வழிமுறைகளையும் பின்பற்றாமல் கையகப்படுத்தும் வகையில் தான் இந்த சட்டம் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. வக்ப் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வக்பு என்பது அல்லா அல்லது கடவுளுக்காக கொடுக்கப்படுவது. அவ்வாறு கடவுளுக்கு கொடுக்கப்படுவதை வேறு யாருக்கும் மாற்ற முடியாது.

ஒருமுறை வக்பு என அறிவிக்கப்பட்டால் அதை எப்போதும் மாற்ற முடியாது. பதிவு செய்யப்பட்ட சொத்தில் தற்போது ஒருவர் சந்தேகம் எழுப்பினால் அந்த சொத்து பறிபோகும் நிலை உள்ளது. பழங்கால ஒரு அமைப்பை அதன் தன்மையை இழக்க செய்திடும். மேலும் சிறுபான்மை உரிமையில் தலையிடுவதாகும். இவ்வாறு வாதிட்டார் கபில்சிபல்.


வாதுரைகளை கேட்ட நீதிபதிகள், மேலும் முந்தைய 1995 வக்ப் சட்டத்தின் விதிகளை நிறுத்தி வைப்பதற்கான எந்தவொரு மனுவையும் பரிசீலிக்கப் போவதில்லை என்று இன்று தெளிவுப்படுத்தினர்.


மேலும் இந்த விவகாரம் ஒரு அரசியல் சாசனம் தொடர்பானது. வழக்கு வலுவானதாக இல்லாத பட்சத்தில் தேவையில்லாமல் கோர்ட் தலையிடுவதில்லை. வக்ப் போர்டு சொத்து தொடர்பாக அவுரங்காபாத்தில் பல்வேறு சர்ச்சை சொத்துக்கள் உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisement