நல்லான்செட்டி குளம் சுற்றுச்சுவரை உடைத்து மர்ம நபர்கள் அடாவடி

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில், கெங்கையம்மன் கோவில் அருகே, நல்லான்செட்டி குளம் உள்ளது. வறட்சி காலத்திலும் தண்ணீர் வற்றாத இக்குளம், சுற்றுப்பகுதியின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், படித்துறை மற்றும் கரை அமைத்து சீரமைக்கப்பட்டது. அதன் பின் முறையான பராமரிப்பில்லாமல், குளத்தினுள் ஏராளமான ஆகாயத் தாமரை செடிகள், குப்பை கழிவுகள் குவிந்து காணப்பட்டன.
குளத்தின் கரைப் பகுதிகளிலும் புதர் மண்டி இருந்தது.
சில மாதங்களுக்கு முன், இந்த குளத்தை செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்து, விரைவில் சீரமைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பேரூராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், கனரக இயந்திரம் வாயிலாக குளம் துார் வாரப்பட்டது.
மின் விளக்கு, குளக்கரை படித்துரை, நடைபாதை, குளத்தைச் சுற்றி இரும்பு கம்பியுடன் சுற்றுச்சுவர் என, குளம் மேம்படுத்தப்பட்டது.
ஆனால், சமூக விரோதிகள் சுற்றுச்சுவர் இரும்பு கம்பியை திருட, குளக்கரை பகுதியில் உள்ள இரும்பு கம்பியுடன் அமைக்கப்பட்ட சுற்றுச்சுவரை, இரவு நேரத்தில் படிப்படியாக உடைத்து சாய்த்து வருகின்றனர்.
இது, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக, 20 லட்சம் ரூபாய் செலவில் குளத்தை மேம்படுத்தியுள்ள நிலையில், இவ்வாறு சமூக விரோதிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
எனவே, இதுபோன்று நடைபெறாமல் தடுக்க, போலீசார் இரவில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என. பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அறிவித்தார் டிரம்ப்; சிறப்புகள் ஏராளம்!
-
பாதை வரிசை மாறிய பகுதியில் காலி மனை வாங்குவது சரியா?
-
கொரோனா தாக்கம் மீண்டும் ஆரம்பம்: மும்பையில் 2 பேர் பலி
-
அமெரிக்காவில் ஓடும் பஸ்சில் இந்திய வம்சாவளி வல்லுநர் குத்திக்கொலை
-
மாநில அந்தஸ்து வேண்டி கையெழுத்து இயக்கம்
-
குருகுலம் பள்ளி சாதனை