'டோல்கேட்' சந்திப்பில் ரவுண்டானா பணி வேகம்

திருவள்ளூர்:சென்னை, காஞ்சிபுரம், ஆவடி பகுதியில் இருந்து திருப்பதி, திருத்தணி, ஊத்துக்கோட்டை செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தை கடந்து செல்கின்றன.
கலெக்டர் அலுவலகம் அருகில், டோல்கேட் அருகே, நான்கு சாலை சந்திக்கும் இடம் உள்ளது. அங்கு, வலதுபுறம் ஊத்துக்கோட்டை, இடதுபுறம் மருத்துவக்கல்லுாரி செல்லும் சாலை பிரிகிறது. நான்கு சாலை சந்திக்கும் இடத்தில், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், சாலை குறுகலாக உள்ளதால், கனரக வாகனங்கள் திரும்புவதற்கு சிரமப்படுகின்றன. இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், டோல்கேட் சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைத்து, நான்குபுறமும் சாலை அகலப்படுத்தும் பணி கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
இதற்காக, 2 கோடி ரூபய் மதிப்பீட்டில் பணிகள் துவங்கியது. நான்கு பகுதியிலும் சாலை அகலப்படுத்திய பின், மழைநீர் கால்வாய் பணியும் நிறைவடைந்துள்ளது.
தற்போது, சாலை சந்திப்பு நடுவில் ரவுண்டானா அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அப்பணி நிறைவடைந்ததும், டோல்கேட் சந்திப்பில் நெரிசல் குறையும் என, நெடுஞ்சாலைத் துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர்.