நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறப்பு: விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவு

நாகர்கோவில்:நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை இறந்ததை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே வடக்கு தாமரைகுளம் கீழத் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். மனைவி ராதிகா 19. இவர் பிரசவத்துக்காக சில நாட்களுக்கு முன் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சென்றார்.

பிரசவத்திற்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது; வலி வந்தவுடன் வாருங்கள் என கூறி அனுப்பி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் மீண்டும் ராதிகா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஸ்கேன் எடுப்பதற்காக அவரை நீண்ட நேரம் காக்க வைத்ததாக கூறப்படுகிறது.

ஸ்கேன் செய்த பின்னர் குழந்தை நன்றாக இருக்கிறது, நீங்கள் அட்மிட் ஆகி விடுங்கள் என கூறியுள்ளனர். அங்கு அட்மிட் செய்யப்பட்ட நிலையில் ஆபரேஷன் செய்து குழந்தை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கும் சுரேஷ் சம்மதம் தெரிவித்தார். இதற்கிடையில் நள்ளிரவில் பிரசவத்தின் போது குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பா.ஜ., தலைவர் கோபகுமார், ஏராளமான நிர்வாகிகள் அங்கு வந்தனர். மருத்துவக் கல்லுாரி அதிகாரிகளும், போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தி குழந்தையின் உடலை அடுத்த மருத்துவ பரிசோதனை செய்யாமல் கொடுக்க ஒப்புக் கொண்டனர்.

விசாரணை நடத்திய அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் அழகு மீனா டீனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement