கட்டடம் இடிந்து மஹா.,வில் ஆறு பேர் பலி

தானே : மஹாராஷ்டிராவில் நான்கு மாடி கட்டடம் இடிந்த விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் நேற்று பலியாகினர்.

மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் கிழக்கு பகுதியில் நான்கு மாடி கட்டடம் உள்ளது. இதில் ஏராளமானோர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று நான்காவது மாடியின் ஒரு பகுதி திடீரென இடிந்து அடுத்தடுத்த மாடிகளை உடைத்து கொண்டு கீழ் தளத்தில் விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி, 2 வயது குழந்தை மற்றும் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் பலியாகினர்; மேலும் நான்கு பேர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் கட்டடத்தில் சிக்கியவர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். மேலும், காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட அவர்கள் கட்டடம் அருகே யாரும் செல்லாதவாறு பாதுகாப்பு வளையம் அமைத்து, இடிபாடுகளை அகற்றினர்.

Advertisement