விருதுநகரில் சூப்பர் மார்கெட் தீ விபத்து

விருதுநகர்; விருதுநகரில் ஈஷா சூப்பர் மார்கெட்டில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு ,வெப்ப தாக்கத்தால் அருகே இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொருட்களும் பாழானது. மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

விருதுநகர் கே.ஆர்., காடனைச் சேர்ந்தவர் ராமபிரான் 57. இவருக்கு சொந்தமான ஈஷா சூப்பர் மார்கெட் மதுரை ரோட்டில் செயல்படுகிறது. இந்த சூப்பர் மார்கெட்டில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு பணியை முடித்து ஊழியர்கள் பூட்டிச் சென்றனர்.

இரவு 11:00 மணிக்கு கடைக்கு உள்ளே மின் கசிவால் தீப்பிடித்து கரும்புகை வெளியேறியது. மூன்று வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

அடுத்தடுத்த கட்டங்களுக்கு தீ பரவாமல் இருக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் சூப்பர் மார்கெட்டில் இருந்த 'ஏசி' கணினிகள், மின் விசிறிகள், மளிகைப் பொருட்கள் பாழானது.

மேலும் வெப்பத்தின் தாக்கத்தால் அருகே இருந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5 'ஏசி' 6 கணினிகள், மரப்பொருட்கள், பால்சீலிங் கண்ணாடிகள் உட்பட பல பொருள்கள் பாழானது.

சம்பவயிடத்திற்கு வந்த எஸ்.பி., கண்ணன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சந்திரகுமார் ஆகியோர் பணிகளை துரிதப்படுத்தினர்.

மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement