ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை இடிக்க நகராட்சி அதிகாரிகள் முயற்சி

ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளை இடிக்க நகராட்சி அதிகாரிகள், நேற்று முயற்சித்ததை கண்டித்து வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதியில் அரசு மருத்துவமனை ரோட்டில் சுகாதார வளாகம், லாட்ஜ் உட்பட 40-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

இதனை இடித்துவிட்டு கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3. 25 கோடியில் வணிக வளாகம் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து கடந்த இரு நாட்களுக்கு முன்பு நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் பஸ் ஸ்டாண்டில் மைக் மூலம் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

இதில் மே 17க்குள் கடைகளை காலி செய்து நகராட்சியில் ஒப்படைக்க வேண்டும். தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு கடைகள் இடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு நகராட்சி பொறியாளர் கோமதி சங்கர், நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் குழுவினர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்து ஆக்கிமிரப்புகளை அகற்றிவிட்டு கடைகளை இடிக்க முற்பட்டனர்.

கடைகளை இடிக்க தங்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்க வேண்டுமென கோரி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி அதிகாரிகள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பஸ் ஸ்டாண்டில் இருந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை மட்டும் நகராட்சி அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

Advertisement