கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 750 யாத்ரீகர்கள் தேர்வு: வெளியுறவு அமைச்சகம்

புதுடில்லி: வரும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறவுள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு 750 யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது ஹிந்து, ஜைன, புத்த மதத்தவர்களுக்கு மிகவும் புனிதமான ஒரு யாத்திரையாகும். இது கைலாஷ் மலையையும், மானசரோவர் ஏரியையும் சேர்த்து, நேபாளம், திபெத் போன்ற இடங்களில் அமைந்துள்ள ஆன்மீக இடங்களுக்கு மேற்கொள்ளப்படும் ஒரு பயணமாகும். இந்த யாத்திரை டில்லியிலிருந்து தொடங்கி,
உத்தரகாண்ட் மாநிலம் வழியாக லிபுலேக் கணவாய் வழியாக நடைபெறும்.அதன்படி,மத்திய வெளியுறவு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்படும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை, வரும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை நடைபெற உள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவு மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியதாவது:

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு ஆன்லைன் பதிவு இன்று நடைபெற்றது.

இந்த ஆண்டு, 5561 விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் வெற்றிகரமாக பதிவு செய்தனர், இதில் 4024 ஆண் விண்ணப்பதாரர்கள் மற்றும் 1537 பெண் விண்ணப்பதாரர்கள் அடங்குவர். ஒரு தொகுதிக்கு 2 LO உட்பட மொத்தம் 750 தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்ரீகர்கள், லிபுலேக் பாதை வழியாக தலா 50 யாத்ரீகர்கள் கொண்ட 5 தொகுதிகளாகவும், நாது லா பாதை வழியாக தலா 50 யாத்ரீகர்கள் கொண்ட 10 தொகுதிகளாகவும் பயணிப்பார்கள்.

இவ்வாறு கீர்த்தி வர்தன் சிங் கூறினார்.

Advertisement