'கலைமகள் சபா' மோசடி வழக்கில் தலைமறைவு குற்றவாளி 26ல் ஆஜராக நீதிபதி உத்தரவு

நாமக்கல், 'கலைமகள் சபா' என்ற பெயரில் நடந்த மோசடியில் தொடர்புடைய நபரை, 'தேடப்படும் குற்றவாளியாக' நாமக்கல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த, 2006ல், 'கலைமகள் சபா' என்ற நிறுவனம், முதலீட்டாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, அசையா சொத்துகளை வாங்கி குவித்ததுடன், பணத்தை முதலீடு செய்தோருக்கு திரும்ப வழங்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கில், 28 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை உள்பட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு நடந்து வருகிறது. நாமக்கல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், 'கலைமகள் சபா' வழக்கு நிலுவையில் உள்ளது. சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், வள்ளலார் நகரை சேர்ந்த சுந்தரம் மகன் பாஸ்கர் மீது, கலைமகள் சபா மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து, பாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டும், அதை நிறைவேற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை நீதிமன்றம், போலீசார் மேற்கொண்டபோதும், தலைமறைவாகவே உள்ளார்.
இந்நிலையில், நாமக்கல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், பாஸ்கரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. 'சம்பந்தப்பட்ட நபர், வரும், 26 காலை, 10:30 மணி-க்குள், நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என, நீதிபதி விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
* வெண்ணந்துார் இன்ஸ்பெக்டர் கூறியதாவது:
பண மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத, ராசிபுரம் அடுத்த வெண்ணந்துார், தங்கசாலை வீதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் ராஜேந்திரன், 50; இவரை, ராசிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தேடப்படும் குற்றவாளி என அறிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள், ராஜேந்திரனை எந்த இடத்தில் பார்த்தாலும், அவரை பிடித்து அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கவும்.
இவ்வாறு கூறினார்.

Advertisement