மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் நடிகர் ரவி மனைவி மனு

சென்னை:விவாகரத்து வழக்கில், 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கோரிய, மனைவியின் மனுவுக்கு, நடிகர் ரவி மோகன் பதிலளிக்க, சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல சினிமா எடிட்டர் மோகனின் மகன் நடிகர் ரவி. இவருக்கும், 'சீரியல்' தயாரிப்பாளரான சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்திக்கும், 2009ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மனைவி யிடம் இருந்து விவாகரத்து கோரி, நடிகர் ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், குடும்ப பிரச்னை தொடர்பாக, சமரச தீர்வு மையத்தின் வாயிலாக பேச்சு நடத்தஉத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நடிகர் ரவி, ஆர்த்தி ஆகியோர், சமரச தீர்வு மையத்தில் ஆஜராகினர். இருவரிடமும் பல கட்டமாக சமாதான பேச்சு நடந்தது. இருப்பினும், எந்தவித சமரசமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இதையடுத்து, ரவியின் விவாகரத்து கோரிய மனு மற்றும் சேர்ந்து வாழ உத்தரவிட கோரிய ஆர்த்தியின் மனு ஆகியவை, நீதிபதி வி.தேன்மொழி முன், நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, ரவி, ஆர்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர். விசாரணையின்போது, 'ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை. அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும். சேர்ந்து வாழ கோரிய ஆர்த்தியின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்' என, ரவி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, 'மாதம் 40 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் வழங்க, ரவிக்கு உத்தரவிட வேண்டும் என, ஆர்த்தி தரப்பில், ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக ரவி மற்றும் ஆர்த்தி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Advertisement