'ஸ்டெர்லைட்' ஆலையை திறக்க அரசுக்கு அழுத்தம் அதிகரிப்பு

19

சென்னை ; மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சென்னையில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.


எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் நலச் சங்க தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்கள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.


ஆர்ப்பாட்டம் குறித்து, தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:

துாத்துக்குடியில் செயல்பட்டு வந்த, ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட, பல்வேறு தொழில்சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இதனால், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட காப்பர், தற்போது கிலோ 850 ரூபாய் வரை விற்கப்படுகிறது.


உலகளவில் காப்பர் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா, தற்போது காப்பர் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற பெரிய தொழில் நிறுவனங்களை, அரசு மூடுவதால் தொழில் வளர்ச்சி பாதிப்பதோடு, அவற்றை நம்பியுள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடக்கப்படுகிறது.


தற்போது, துாத்துக்குடி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கியதற்கு, அங்கு செயல்பட்டு வந்த ஆலைகளை, அரசு மூடியதுதான் காரணம். ஆலைகளை இயக்குவது தனியார் நிறுவனத்தின் கடமை எனில், அதனால் ஏற்பாடும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை கண்டறிந்து, அதற்கு ஏற்ப உற்பத்தி முறையை மாற்றுவது, அரசின் கடமை.


ஆனால், தமிழகத்தில் இந்த நடைமுறை கிடையாது. துாத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை, பஞ்சாலைகள், நுாற்பாலைகள் என, பல்வேறு தொழில் நிறுவனங்களை, அரசு மூடியுள்ளது.


எனவே, மூடப்பட்ட ஸ்டெர்லைட் தொழிற்சாலை உள்ளிட்ட பெரிய ஆலைகளை அரசு திறப்பதோடு, பிற மாநிலங்களில் செயல்படும் பெரிய தொழில் நிறுவனங்களை, தமிழகத்திலும் இயங்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான், வளர்ந்த நாடுகளின் பட்டியலில் நாமும் இடம்பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement