இரண்டு கவுன்டர்களில் மட்டுமே மாத்திரை அமைச்சர் உத்தரவிட்டும் தொடரும் அவலம்

1

சென்னை: அமைச்சர் உத்தரவிட்டதும் கூடுதல் கவுன்டர்கள் திறப்பதாக கணக்கு காட்டிவிட்டு, இரண்டு கவுன்டர்களில் மட்டுமே மாத்திரை வழங்குவதால், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகள் மீண்டும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.

சென்னை அண்ணாசாலையில் உள்ள, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், தினமும் 3,000 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில், நான்கு நாட்களுக்குமுன், நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்துகளை வாங்கினர். நோயாளிகள் அவதி குறித்த படங்கள் சமூக வலைதங்களில் பரவியதையடுத்து, தீர்வு காண அமைச்சர் சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

'கூடுதலாக இரண்டு கவுன்டர்கள் என, ஏழு கவுன்டர்களில், 10 மருந்தாளுநர்கள் வாயிலாக மாத்திரைகள் வழங்கப்படும்' என, மருத்துவமனை இயக்குநர் மணி அறிவித்தார்.

இப்பிரச்னை எழுந்த மறுநாள் மட்டுமே, நோயாளிகள் காத்திருக்காமல் மாத்திரைகளை வாங்கி சென்றனர். அடுத்தடுத்த நாட்களில் கவுன்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

மீண்டும், இரண்டு கவுன்டர்களில் மட்டுமே மருந்து, மாத்திரைகள் விநியோகம் நடக்கிறது. மருந்து வாங்க நோயாளிகள் ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து, நோயாளிகள் கூறியதாவது:

இதற்கு முன், மருந்து கவுன்டர்களின் உட்புறத்தில் இருந்து வெளிப்புறம் வரை, நீண்ட வரிசையில் காத்திருந்து, மாத்திரை வாங்கி சென்றோம். தற்போது, உட்புறம் மட்டுமே நிற்க அனுமதிக்கின்றனர். வெளிப்புறமும் கூட்டம் உள்ளது. அவர்களை நீணட துாரம் இருக்கையில் அமர வைக்கின்றனர்.

இரண்டு கவுன்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. அமைச்சர் உத்தரவிட்டும், மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

ஒரே இடத்தில் மருந்து, மாத்திரைகளை வழங்காமல், முக்கியமான ஒவ்வொரு துறைக்கும் ஒரு இடம் என, மூன்றுக்கும் மேற்பட்ட மருந்தகங்களை ஏற்படுத்தி, மருந்து, மாத்திரைகளை வழங்க வேண்டும். அப்போதுதான், நோயாளிகள் அவதி தீரும்.

இங்கு மாத்திரை வாங்க வருவோரில் பெரும்பாலானோர், இதயம் மற்றும் நரம்பியல் நேயாளிகளாக இருப்பதால், அவர்கள் நலனில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement