தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்; நயினார் நாகேந்திரன் விருப்பம்

6


திருநெல்வேலி: ''அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும்'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் நெல்லையப்பர் திருக்கோவிலில் செய்யப்பட்டு வரும் வெள்ளி தேர் திருப்பணிக்காக ஒரு கிலோ வெள்ளியை, நயினார் நாகேந்திரன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையாவிடம் ஒப்படைத்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: ராமதாஸ், அன்புமணி இடையே பிரச்னைக்கு பின்னால் பா.ஜ., இல்லை. அவர்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும்.




பா.ஜ., கூட்டணியில் அவர்கள் தொடர வேண்டும். அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய வேண்டும். பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணம். தி.மு.க., கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என்பது எனது விருப்பம்.


2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணியை நம்பி மட்டுமே முதல்வர் ஸ்டாலின் களத்தில் இருக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பெரும்பாலான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவைகளால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஒவ்வொரு புதிய திட்டம் கொண்டு வந்தாலும் பல்வேறு எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும் ஆதார் அட்டை கொண்டு வந்த போதும் பல சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்பட்டது தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. அதேபோல், தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து இருப்பது சிக்கல்கள் இல்லாமல் நடைமுறைக்கு வரும். என்.ஆர். சி., என்ற சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்டது அல்ல.


அண்டை நாடுகளிலிருந்து மேற்கு வங்கத்தின் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய நாட்டில் உள்ள எந்த இஸ்லாமியர்களுக்கும் அந்த சட்டத்தால் பாதிப்பு இல்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.

Advertisement