சென்னை புகார் பெட்டி

காந்தி மண்டபம் சாலையில் சகதியால் விபத்து அபாயம்



கோட்டூர்புரம், காந்தி மண்டபம் சாலை, ஆங்காங்கே பெயர்ந்து பள்ளமாக காணப்பட்டது. இதையடுத்து மாநகராட்சியினர், செம்மண் கொட்டி, பள்ளத்தை சீரமைத்தனர்.

இந்நிலையில் இரு நாட்களாக மழை பெய்ததால், சீரமைக்கப்பட்ட இடங்கள், மேடும் பள்ளமுமாக மாறி உள்ளன.

இதனால், இரவு நேரத்தில் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்வோர், சகதியில் சறுக்கி, விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.

உயிரிழப்பு ஏற்படும் முன், சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


- சின்னதுரை, கோட்டூர்புரம்

மூடப்படாத பள்ளத்தால் புழுதிவாக்கத்தில் ஆபத்து



புழுதிவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாய் பணி, 90 சதவீதம் முடிந்துள்ளது. ஆனால், இணைப்புக்காக, சில பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படவில்லை.

அன்னை தெரசா நகர், 15வது தெரு, பாலாஜி நகர், 24வது தெரு ஆகியவற்றிலும், பணி முடிந்துள்ளது. ஆனால், கால்வாய் இணைப்பு வழங்கப்படவில்லை.

தவிர, சாலை வளைவில் இருந்த பள்ளமும் மூடப்படாததால், இரவில் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள், அதில் விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

மூன்று நாட்களுக்கு முன் ஒருவர் விழுந்து, தோள் பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை, காரின் சக்கரம் சிக்கியது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குறிப்பிட்ட பள்ளத்தை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வி, புழுதிவாக்கம்.

சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும்



அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில், வில்லிவாக்கம், சிட்கோ நகர் உள்ளது. இங்குள்ள முதல் தெருவில், மாநகராட்சி பராமரிப்பில், சிறுவர் விளையாட்டு பூங்கா உள்ளது.

இப்பூங்காவில் போதிய பராமரிப்பு இல்லாததால், விளையாட்டு உபகரணங்களில் செடிகள் சூழ்ந்து வளர்ந்து உள்ளன.

இரவில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் பயன்படுத்தப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து, பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சந்திரசேகர், சிட்கோ நகர்

Advertisement