கோவிலில் கையெறி குண்டு தாக்குதல்; காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருவர் கைது

சண்டிகர்: அமிர்தசரஸ் கோவிலில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்திய விவகாரத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் இருவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பஞ்சாபின் அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள கோவிலில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது, கோவிலுக்குள் இருந்த அர்ச்சகர் காயமின்றி உயிர் தப்பினார். வேறு யாருக்கும் பாதிப்பு ஏதும் இல்லை.
கடந்த மார்ச் மாதம், நடந்த இச்சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (மே 22) காலிஸ்தான் பயங்கரவாதிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் கோவில் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக இருந்த காலிஸ்தான் பயங்கரவாதி பகவந்த் சிங் நேற்று அமிர்தசரஸில் உள்ள அகல்கர் கிராமத்தில் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன் மூலம் இந்த வழக்கில் மொத்தம் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

