பஸ் ஸ்டாண்டையும் கொஞ்சம் கவனியுங்க! அடிப்படை வசதிகள் இல்லை; கண்டு கொள்ளாத நகராட்சி

உடுமலை : உடுமலை பஸ் ஸ்டாண்டில், திறந்த வெளியில் கழிவுகள் வெளியேற்றப்பட்டு சுகாதாரக்கேடு நிரம்பியுள்ளதோடு, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாமல் பாதித்து வருகின்றனர்.

உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு நகரங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் நிலையில், அடிப்படை வசதிகள் இல்லாததால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பஸ் ஸ்டாண்டிற்குள் வரும் பிரதான வழித்தடங்களை ஆக்கிரமித்து, வணிக வளாகத்திலுள்ள கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், பஸ்கள் வரும் வழியிலேயே பொதுமக்கள் வர வேண்டிய அவல நிலை உள்ளது.

அதே போல், பஸ் ஸ்டாண்ட்டிற்குள், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், பஸ்கள், பயணியர் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

அவர்கள் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட, புறக்காவல் நிலையம், எந்நேரமும் பூட்டியே காணப்படுவதால், வழிப்பறி, பிக்பாக்கெட் என குற்றச்செயல்களும் அதிகளவு நடந்து வருகிறது.

மேலும், உணவகங்கள், ஓட்டல்களிலிருந்து, இலை மற்றும் உணவு கழிவுகள் நேரடியாக பயணியர் காத்திருக்கும் பகுதியில் போடப்படுகிறது. ஓட்டல் மற்றும் டீக்கடைகளிலிருந்து, உணவு கழிவுகள், கழிவு நீர் நேரடியாக பஸ் ஸ்டாண்டிற்குள் வெளியேற்றப்படுகிறது.

திறந்தவெளி சாக்கடை கால்வாயாக பஸ் ஸ்டாண்ட் மாற்றப்பட்டுள்ளதால், துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. சாக்கடை கழிவு நீரில் பயணியர் நடந்து செல்லும் அவல நிலை உள்ளது.

அதே போல், பயணியர் அமர இருக்கை வசதியில்லாமல், கால்கடுக்க காத்திருக்கும் நிலையும், கழிவுகள் தேங்கி சுகாதார கேடு, துர்நாற்றம் நிரந்தரமாக உள்ளது.

கழிப்பிட வசதிகள் இல்லாததோடு, இருக்கும் ஒரு கழிப்பிடமும் பராமரிப்பின்றி, துர்நாற்றத்துடன் காணப்படுவதால், திறந்த வெளி கழிப்பிடங்கள் பல இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதோடு, மது போதை ஆசாமிகள் பஸ் ஸ்டாண்டிற்குள் விழுந்து கிடக்கின்றனர். பெண்கள் பாலுாட்டும் அறை திறக்கப்படாமல் உள்ளது.

பெண்கள், குழந்தைகள் கழிப்பிட வசதியில்லாமல் பாதித்து வருகின்றனர். பயணியர் வசதிக்காக, பல இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி இருந்தும், பராமரிப்பின்றி, சிதிலமடைந்து வீணாக உள்ளது.

எனவே, உடுமலை பஸ் ஸ்டாண்டில், அடிப்படை வசதிகளை மேற்படுத்த, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement