பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் பலி

லுாதியானா: பஞ்சாபின் லுாதியானாவில் கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழந்தனர்.

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் கடந்த 12ல், கள்ளச்சாராயம் குடித்த 27 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சோகம் மறைவதற்குள், லுாதியானா மாவட்டம் பாஸ்தி ஜோதேவாலில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்குள்ள நுார்வாலா என்ற இடத்தில், நேற்று முன்தினம் இரவு சாராயம் குடித்த தொழிலாளர்கள் மூவர், வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

அவர்களை அப்பகுதியினர் மீட்டு, அருகே உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை சோதனையிட்ட டாக்டர், மூன்று பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். கள்ளச்சாராயம் விற்பனை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement