கொல்லிமலை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு; பாதுகாப்புடன் குளிக்க அறிவுரை

சேந்தமங்கலம், கொல்லிமலை அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் பாதுகாப்பாக குளிக்க வேண்டும் என, வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில், கொல்லிமலை சுற்றுலா தலமாக உள்ளது. இந்த மலைக்கு தற்போது கோடை விடுமுறை என்பதால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கொல்லிமலையில் போதிய மழையில்லாததால், அருவிகள் தண்ணீர் இன்றி வறண்டிருந்தன.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களாக, கொல்லிமலையில் மழை பெய்து வருவதால், ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இதனால், வெளியூர்களில் இருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா வருவோர், அருவிகளில் தண்ணீர் அதிகமாக வருவதால், குழந்தைகளுடன் பாதுகாப்பாக குளிக்க வேண்டும். மேலும், மழை பெய்யும் போதும், பெய்த சில மணி நேரத்திற்கு அருவியில் குளிக்கக் கூடாது என, வனத்துறையினர் மற்றும் போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Advertisement