மஹா.,- சத்தீஸ்கர் எல்லையில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக் கொலை; பாதுகாப்பு படை அதிரடி

1


மும்பை: மஹாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட்டுகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


மஹாராஷ்டிரா-சத்தீஸ்கர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கட்சிரோலி மாவட்டத்தில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து, அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.


பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருக்கலாம் என பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


இரண்டு நாட்களுக்கு முன்பு, சத்தீஸ்கரில் நக்சல் அமைப்பு தலைவன் பசவராஜு உட்பட நக்சலைட்டுகள் 27 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement