கடன் தவணையை திருப்பி செலுத்தாத போக்குவரத்து கழகங்கள்

சென்னை: ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தவணை தொகையை, அரசு போக்குவரத்து கழகங்கள் வழங்காததால், பஸ் ஊழியர்களுக்கு கடன் வழங்க, கூட்டுறவு சங்கம் மறுத்துள்ளது. இதனால், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய செலவுக்கு பணம் பெற முடியாமல், ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றை சார்ந்த ஊழியர்கள், சென்னையில் உள்ள பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில், உறுப்பினர்களாக உள்ளனர்.
போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை, இந்த கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் மனுக்கள் பெறப்பட்டு, கடன் வழங்குவது வழக்கம். அந்த கடனுக்கான மாத தவணையை, ஊழியர்களிடம் சம்பளத்தில் பிடித்தம் செய்து, அதை கூட்டுறவு சங்கத்திற்கு வழங்க வேண்டியது, போக்குவரத்து கழகங்களின் வேலை.
ஆனால், கடந்த சில மாதங்களாக, அந்த தவணை தொகையை சரிவர செலுத்தாததால், புதிய கடன் வழங்க முடியாத நிலை இருப்பதாக, கூட்டுறவு சங்கம் புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
மருத்துவம், கல்வி போன்ற அத்தியாவசிய செலவுக்காக, பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற விண்ணப்பித்தோம். ஆனால், தற்போது கடன் தர முடியாத சூழலில் இருப்பதாக, சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதற்கு காரணமாக, அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்து, நிலுவை தொகை வரவில்லை என, கூறுகின்றனர். இப்பிரச்னைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, கூட்டுறவு கடன் சங்க முன்னாள் இயக்குநர் ஒருவர் கூறியதாவது:
சங்கத்தின் உறுப்பினராகும் போக்குவரத்து ஊழியர்களுக்கு, 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. மற்ற இடங்களை ஒப்பிடுகையில் வட்டி சற்று குறைவு என்பதால், ஊழியர்களுக்கு இந்த கடன் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதற்கிடையே, கடந்த சில மாதங்களாக, அரசு போக்குவரத்து கழகங்கள், கூட்டுறவு கடனுக்கான தவணை தொகையை, ஊழியர்களிடம் பிடித்தம் செய்கிறது. அந்த தவணை தொகையை, கூட்டுறவு சங்கத்துக்கு சரியாக செலுத்தவில்லை. ஓரளவுக்கு நிதி இருந்ததால், குறைந்த அளவில் கடன் அளிக்கப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களாக நிதியே இல்லாத சூழலில், கடன் வழங்க முடியாது என, கூட்டுறவு கடன் சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, விழுப்புரம் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகங்களிடம் இருந்து 20 கோடி ரூபாய், வர வேண்டிய நிலுவை தொகை உள்ளது.
இதனால், கூட்டுறவு சங்கம் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது. ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை விரைவாக பெற, சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் கவனத்திற்கு; குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
-
அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; அதிக மழைப்பொழிவு எங்கே!
-
ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா வைரசுடன் ஒப்பிடுவது துர்பாக்கியம்: கவர்னர் ரவி பேச்சு
-
போலி கிளினிக் நடத்திய ஜோலி நான்காவது முறையாக சிக்கினார்
-
தமிழகத்தில் தொழில் துவங்க இருந்த ஆலை உ.பி., சென்ற காரணம் என்ன
-
சங்ககிரியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு; கொலை வழக்கில் தேடப்பட்ட வாலிபரை சுட்டுப்பிடித்த போலீஸ்