எத்தனை காலம்தான் 'சைக்கிள் படி' தருவீங்க இருசக்கர வாகனப்படி கேட்கும் சாலை ஆய்வாளர்கள்

மதுரை:தமிழக நெடுஞ்சாலைத் துறையில் ஐ.டி.ஐ., முடித்த சாலை ஆய்வாளர்கள், 6 அம்ச கோரிக்கைகளுக்காக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதில் பலனில்லாததால் மே 27 ல் சென்னை நெடுஞ்சாலைத்துறை ஒருங்கிணைந்த அலுவலகத்தில் சாலை ஆய்வாளர் சங்க மாநில தலைவர் சுரேஷ், பொருளாளர் செல்வராஜன், தொழில்நுட்ப சாலை ஆய்வாளர்கள் சங்க பொதுச் செயலாளர் சரவணகுமார் தலைமையில் கூட்டமைப்பாக பெருந்திரள் முறையீடு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

தொழில்நுட்ப பணியாளர்களின் (திறன்மிகு உதவியாளர்கள்) சாதாரண நிலை, தேர்வு நிலை பணியாளர்களிடையே ஊதிய முரண்பாடுகளை களைந்து ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். நகராட்சி நிர்வாகத்தில் ஐ.டி.ஐ., கல்வித்தகுதியுடன் தொழில்நுட்ப பணியில் உள்ளவர்களுக்கு தரஊதியம் ரூ.4200 வழங்கப்படுகிறது.

அதே தகுதியில் நெடுஞ்சாலைத் துறையில் திறன்மிகு உதவியாளர்களாக (தொழில்நுட்ப பணியாளர்களாக) பணியாற்றுவோருக்கும் அத்தொகை வழங்க வேண்டும்.

இளநிலை பொறியாளர் பதவி உயர்வுக்கு நேரடி நியமனத்திற்காக ஒதுக்கி, 10 ஆண்டுகளாக நிரப்பப்படாத பணியிடங்களை (பேக் லாக்) திறன்மிகு உதவியாளர் பதவியில் உள்ளவர்களால் நிரப்ப வேண்டும்.

சாலை ஆய்வாளர் (திறன்மிகு உதவியாளர்) பதவியில் இருந்து இளநிலைப் பொறியாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பதவி உயர்வுக்கான முதுநிலைப்பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஊரக வளர்ச்சித்துறையைப் போல, நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., மூலம் நிரப்ப வேண்டும்.

சாலை ஆய்வாளர்களுக்கு ஆரம்ப காலத்தில் இருந்து வழங்கப்படும், தற்காலத்திற்கு பொருத்தமே இல்லாத சைக்கிள் படியை, இருசக்கர வாகன படியாக மாற்றி அமைக்க வேண்டும்.

திறன்மிகு உதவியாளர் என்பதை மீண்டும் சாலை ஆய்வாளர் என்று மாற்ற வேண்டும் என்ற 6 அம்ச கோரிக்கைகளுக்காக முறையிட உள்ளோம் என்றனர்.

Advertisement