தீக்குளிப்பு போராட்டம் சிதம்பரம் தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம்: தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடத்த வலியுறுத்தி தீக்குளிப்பு போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது என, போலீசில் பொது தீட்சிதர்கள் மனு அளித்துள்ளனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த கோரி, தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனர் ராதாகிருஷ்ணன் வரும் 28ம் தேதி தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதற்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அனுமதி அளிக்க கூடாது என, போலீசாரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொது தீட்சிதர்களின் செயலாளர் சிவசுந்தர தீட்சிதர், டி.எஸ்.பி., லாமேக்கிடம் அளித்த மனுவில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் சிறப்பு அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பிரம்மோற்சவம் சம்பந்தமாக, தெய்வீக பக்தர்கள் பேரவை ராதாகிருஷ்ணன் என்பவர் தீக்குளிப்பு போராட்டம் அறிவித்துள்ளது சட்ட விரோதமானது. தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடிமரம் மாற்றி அமைப்பது சம்பந்தமாக சிதம்பரம் சப் கோர்ட்டில் வழக்கு உள்ளது.

இந்த வழக்கில், கொடிமரம் தற்போதைய நிலையில் நீடிக்க வேண்டுமென, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனவே, வெறுப்புணர்வை துாண்டும் வகையில் போராட்டம் அறிவித்துள்ள ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிந்து, பொது தீட்சிதர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

தீக்குளிப்பு போராட்டத்திற்கு தடை விதிப்பதுடன், வரும் 28ம் தேதி நடராஜர் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

Advertisement