மனைவி கண்முன்னே லாரி மோதி கணவர் பலி

கோவை : கோவை, செல்வபுரம், முத்துசாமி காலனியை சேர்ந்தவர் பூபாலன், 40; ஜவுளி கடையில் பணியாற்றி வந்தார். பூபாலனின் உறவினர் வீடு கிரகப்பிரவேசத்திற்கு செல்வதற்காக, நேற்று காலை மனைவி துர்கா தேவியுடன் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புறப்பட்டார். ஸ்கூட்டரை துர்கா தேவி ஓட்டினார்.

இருவரும் உக்கடம் ரவுண்டானா அருகில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி, வளைவில் திரும்பிய போது ஸ்கூட்டர் மீது உரசியது. இதில், கணவன், மனைவி இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, லாரியின் பின் சக்கரம் பூபாலன் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். துர்கா தேவி லேசான காயத்துடன் தப்பினார்.

சம்பவம் குறித்து அறிந்த, மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பூபாலன் உடலை மீட்டனர். டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement