கடிதம் எழுதும் முகாம் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை, :'மெட்ராஸ் போஸ்ட் கிராசிங் கம்யூன்' மற்றும் 'போஸ்டலி ஹட்' ஆகிய அமைப்புகள் சேர்ந்து, மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்காவில், கோடைகால கடிதம் எழுதும் முகாம் நடத்துகின்றன.

தபால் குறித்த அறிமுகம், தபால் அட்டையில் கடிதம் எழுதுவது, தபால் தலைகளின் சிறப்பு, சிறப்பு தபால் உறைகள் மற்றும் கலைநயத்துடன் தபால் அட்டை தயாரிப்பது போன்ற தலைப்புகளில் முகாம் நடைபெறுகிறது. இதில், 6 முதல் 80 வயதுள்ளவர்கள் பங்கேற்றனர்.

'மெட்ராஸ் போஸ்ட் கிராசிங் கம்யூன்' அமைப்பின் பொறுப்பாளர் ஜெய்சக்திவேல் கூறியதாவது:

கடிதம் எழுத ஆர்வம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, 2019ம் ஆண்டு, இந்த அமைப்பை துவங்கினோம்.

மாதம்தோறும் பூங்கா, மைதானம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் கூட்டம் நடத்தி விவாதிக்கிறோம்.

புகைப்படத்துடன் கூடிய தபால் அட்டை அனுப்புவதை பலர் விரும்புகின்றனர். பொதுவாக, தபால் நிலையங்களில் வட்ட வடிவிலாக முத்திரை குத்தப்படும்.

சென்னையில், நான்கு இடங்களில் 'நிரந்தர பட முத்திரை' பதித்து அனுப்பும் இடங்கள் உள்ளன. அங்கு சென்று தபாலில் முத்திரை குத்துவதை ஊக்கப்படுத்துகிறோம்.

அதேபோல், உலக மக்களை கடிதம் வாயிலாக ஒருங்கிணைக்கும், 'போஸ்ட்கிராசிங்' செயல்பாடுகள் குறித்து பகிர்கிறோம்.

கடிதம் எழுதுவது, தபால் தலை, உறை சேகரிப்பில் ஆர்வம் கொண்டவர்கள், 98413 66086 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement