செம்பரம்பாக்கம் ஏரி பாசன கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

குன்றத்துார் :சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி ஆழம் நீர் மட்டமும் கொண்டது.

இந்த ஏரியின் கரை, பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் கிராமம் முதல், குன்றத்துார் அருகே புதுப்பேடு வரை, 8.34 கி.மீ., அமைந்துள்ளது.

இந்த கரையில், எட்டு இடங்களில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் வெளியேற்றும் மதகுகள் உள்ளன.

இந்த எட்டு மதகுகளில் இருந்து பிரிந்து செல்லும், 16 பாசன கால்வாய்கள் குன்றத்துார், மலையம்பாக்கம், மாங்காடு, அய்யப்பன்தாங்கல், பரணிபுத்துார், கோவூர், கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், கொல்லச்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம்கட்டளை, சிறுகளத்துார், பழந்தண்டலம், திருமுடிவாக்கம் ஆகிய பகுதிகள் வழியே கடந்து சென்று, அடையாறு கால்வாயில் முடிகின்றன.

மழை காலத்தில் நிலப்பரப்பில் தேங்கும் தண்ணீர், இந்த கால்வாய் வழியே வேகமாக வெளியேறி, அடையாற்றை சென்றடைந்தது.

தற்போது, இந்த கால்வாய் ஆக்கிரமிப்பில் உள்ளது. பல இடங்களில் கால்வாய் மாயமாகி விட்டது. கால்வாய் சென்ற பகுதிகளை மண் கொட்டி மூடி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இதனால், மழை காலத்தில் வெள்ள நீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்பதால், மேற்கண்ட புறநகர் பகுதிகளில் ஆண்டுதோறும் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி பாசன கால்வாய் செல்லும் வழித்தடத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை துார்வார வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement