86 வயதில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதி கிராம மக்கள் நெகிழ்ச்சி

பார்த்திபனுார்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா பார்த்திபனுார் பகுதியில் 82 வயது மனைவி இறந்த சோகத்தில் 86 வயது கணவர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பார்த்திபனுார் சூசையப்பர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கேசவபாண்டி 86. இவரது மனைவி அமராவதி 82. இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனர். கிராமத்தில் இந்த தம்பதியினர் இணைபிரியாமல் விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

உடல் நலக்குறைவால் அமராவதி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். கேசவபாண்டி இரவு முழுவதும் சோகத்துடன் காணப்பட்ட நிலையில் நேற்று காலை 6:00 மணிக்கு மனைவியின் உடல் அருகில் மயங்கிய நிலையில் உயிரிழந்தார்.

இது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அனைவருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்த தம்பதியினரை மயானத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய முடிவெடுத்தனர்.

நேற்று மாலை சூசையப்பர்பட்டி மயானத்தில் வாழ்விலும் சாவிலும் இணைபிரியாத தம்பதியை அடக்கம் செய்தனர்.

--

Advertisement