இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய 91 வயது முதியவர்

துாத்துக்குடி:துாத்துக்குடியில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய, 91 வயது முதியவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

துாத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம், சுந்தர் நகரைச் சேர்ந்தவர் நிஷாந்த், 31; தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி சிந்துஜா, 26. இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கந்தசாமி, 91. அவரது வீட்டில் வளர்த்த வாழை மரத்து இலைகள், நிஷாந்த் வீட்டுக்குள் சென்றுள்ளது.

அதை அகற்றுமாறு கந்தசாமியிடம், நிஷாந்த், சிந்துஜா கூறியுள்ளனர். அவர் அகற்ற மறுத்ததால், தங்கள் வீட்டுப்பகுதிக்குள் இருந்த வாழைமரத்தின் இலைகளை, 22ம் தேதி இருவரும் வெட்டியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, வீட்டின்முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிந்துஜாவை, கந்தசாமி அரிவாளால் காலில் வெட்டினார். சிந்துஜா ஓடியபோதிலும், விடாமல் விரட்டிச் சென்று வெட்டினார்.

அக்கம்பக்கத்தினர் சிந்துஜாவை காப்பாற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. முத்தையாபுரம் போலீசார் கந்தசாமியிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement