உயிரை விட பட்டாசு உற்பத்தியில் அதிக வருமானம் முக்கியமில்லை தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் பேச்சு

விருதுநகர்:''பட்டாசு உற்பத்தி தொழிலில் மனித உயிர்களை விட அதிக வருமானம் ஈட்டுவது முக்கியமில்லை'', என விருதுநகரில் தமிழக தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால் பேசினார்.

விருதுநகர் மாவட்டத்தில் தீ, வெடி விபத்துக்களை தடுப்பது குறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுடனான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது:

நாடு முழுவதும் சிவகாசி பட்டாசு விற்பனை செய்யப்படுவது பெருமையாக உள்ளது. ஆனால் இங்குள்ள பட்டாசு ஆலைகள், கடைகளில் ஏற்படும் வெடி விபத்துக்களால் பலர் உயிரிழக்கின்றனர்.

இவற்றில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு நன்றாக தெரியும்.

மனித உயிர்கள் விலை மதிப்பற்றது. உயிருக்கு ஈடுஇணை எதுவும் இல்லை. மனித உயிர்களை விட அதிக வருமானம் ஈட்டுவது முக்கியமில்லை.

பட்டாசு ஆலைகளை குத்தகைக்கு விடுவதால் அதிக விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மேலும் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு உணர்வுடன் பட்டாசு உற்பத்தி தொழிலில் ஈடுபட வேண்டும்.

தொழிலாளர்கள் உங்களுக்காக பணிபுரிகிறார்கள் என்ற எண்ணம் உரிமையாளர்களுக்கு இருக்க வேண்டும்.

விபத்து, பலி என சிவகாசி பெயர் எடுக்காமல் சிறந்த பட்டாசு, பாதுகாப்பான பட்டாசு உற்பத்திக்கு சிவகாசி என்று பெயர் எடுப்பதே நமக்கு பெருமை. இதற்கான உறுதியை எனக்கு அனைவரும் அளிக்க வேண்டும் என்றார். எஸ்.பி., கண்ணன், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் சந்திரகுமார், சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement