பண மோசடியில் ஈடுபட்ட இந்தியர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தல்

புதுடில்லி: நம் நாட்டிலும், அமெரிக்காவிலும் ஆன்லைன் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்ட இந்தியரான அங்கத் சிங் சந்தோக், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்த இந்தியரான அங்கத் சிங் சந்தோக், 34, போலி நிறுவனங்களை உருவாக்கி, ஆன்லைன் தொழில்நுட்ப ஆதரவு என்ற திட்டத்தை துவங்கினார். இத்திட்டத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக அவர் விளம்பரம் செய்தார்.

இதை நம்பி ஏராளமான அமெரிக்கர்கள் முதலீடு செய்துள்ளனர். இதில் கிடைத்த பணத்தை, போலி நிறுவனங்கள் வாயிலாக அங்கத் சிங் சந்தோக் பயன்படுத்தினார். மேலும், அந்த பணத்தை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் அனுப்பி உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த திட்டத்தின் வாயிலாக, 13 கோடி ரூபாய் அளவுக்கு அவர் மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின்படி விசாரித்த அமெரிக்க போலீசார், 2022 மார்ச்சில், அங்கத் சிங் சந்தோக்கை கைது செய்தனர்.

விசாரணையில், இந்தியாவிலும் பல்வேறு ஆன்லைன் மோசடிகளில் அவர் ஈடுபட்டதும், தேடப்படும் நபர் என்பதும் தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த அமெரிக்க நீதிமன்றம், அங்கத் சிங் சந்தோக்குக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, அமெரிக்காவில் இருந்து அங்கத் சிங் சந்தோக்கை நாடு கடத்தும் நடவடிக்கையில், சி.பி.ஐ., அதிகாரிகள் தீவிரமாக இறங்கினர். சமீபத்தில் அவரை நாடு கடத்த அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட அங்கத் சிங் சந்தோக், நம் நாட்டிற்கு வந்த போது, விமான நிலையத்தில் வைத்து சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.

Advertisement