சோதனைக்கு பயந்து டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்; இ.பி.எஸ்., விமர்சனம்

21

கோவை: ''அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிடி ஆயோக் கூட்டத்திற்கு பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு இ.பி.எஸ்., அளித்த பேட்டி: மூன்று ஆண்டுகளாக நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின் தற்போது பங்கேற்றது ஏன்? பிரதமர் மோடி தலைமையில் 3 ஆண்டுகளாக நடந்த நிடி ஆயோக் கூட்டத்தில் ஏன் பங்கேற்கவில்லை? மக்கள் பிரச்னைகளுக்கு செல்லாமல் இப்போது ஏன் சென்றார். அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிடி ஆயோக் கூட்டத்திற்கு பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றார்.



முதல்வர் ஸ்டாலின் கடமை தவறிவிட்டார். மக்கள் நலனின் அக்கறை இருந்திருந்தால் மூன்று ஆண்டுகள் நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்காமல் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று இருப்பார். தமிழகத்தில் பல்வேறு துறையில் ஊழல் நடக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்த போது மோடி வந்தால் ஸ்டாலின் கருப்பு பலூன் பறக்க விட்டார்.

வெள்ளைக் கொடி






எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்புக்கொடி காட்டிய தி.மு.க., இப்போது வெள்ளைக் கொடி காட்டுகிறது? தி.மு.க., நிர்வாகி மீது பெண் கொடுத்த பாலியல் புகாரில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க., நிர்வாகி மீது பெண் கொடுத்த புகார் என்ன ஆனது? அரசியல் தலைவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்று, அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது.

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு




அதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. தி.மு.க., அரசு வந்த பிறகு பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என நான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறேன். ஆனால் இதுவரை தரமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.

Advertisement