டில்லி விமான நிலைய மேற்கூரை மழையால் இடிந்து விபத்து: காங். விமர்சனம்

புதுடில்லி: பலத்த மழை எதிரொலியாக டில்லி விமான நிலையத்தின் ஒருபகுதி மேற்கூரை இடிந்த விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் டில்லியில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை கொட்டியது. கனமழை எதிரொலியாக பல பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. வானிலை மோசமாகவே, விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
100க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகளில் பாதிப்பு காணப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து முடங்கியது.
மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் டில்லி விமான நிலைய முனையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சம்பவத்தை அங்கே உள்ள ஒருவர் தமது மொபைல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை தமது சமூக வலை தள பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ், ஒரு தூறலுக்கு பின்னர் டில்லி விமான நிலையத்தின் வளர்ச்சி நிரம்பி வழிகிறது என்று விமர்சித்துள்ளது.
கடந்தாண்டு ஜுன் மாதம் இதேபோன்று விமான நிலையத்தின் 1வது முனையத்தில் மேற்கூரை ஒருபகுதி இடிந்து விழ, அதில் ஒருவர் பலியான சம்பவம் குறிப்பிடத்தக்கது.
