மாணவர்களுக்கு பிரதமரின் கல்வி கடன்... திட்டம்; ரூ.10 லட்சம் வரை பிணையில்லா உதவி

புதுச்சேரியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் கல்லூரி மற்றும் உயர் கல்வி கற்க தயாராகி வருகிறார்கள். இவர்களில், பெரும்பாலானோருக்கு இருக்கும் முக்கிய சிக்கல் கல்லூரிக் கட்டணத்துக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதுதான். பலரும் கல்விக் கடன் வாங்குவது தொடங்கி, அதைத் திரும்பச் செலுத்துவது, கடனை நிர்வகிப்பது என பல கேள்விகளுடன் இப்போதே வங்கிகளை நாடி வருகின்றனர்.



இவர்களுக்கு வழிகாட்டும் விதத்தில் சென்டாக் பிரதமரின் கல்வி கடன் திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பினை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த கல்வி கடன் திட்டத்தின் பெயர் பிரதமர் வித்யாலட்சுமி கல்வி கடன் திட்டம். தேசிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக பிரதமர் வித்யாலட்சுமி கல்வி கடன் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.


இந்த திட்டம் மூலம் நாட்டின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு பிணையமில்லாத, உத்தரவாதமில்லாத கடன் உதவி வழங்கப்படும்.


இந்தத் திட்டம் மூலம் 2031-க்குள் ரூ.3,600 கோடி மதிப்பில் பிணையம் இல்லாத கல்விக் கடன்களை வழங்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் கடன் பெற புதுச்சேரி மாணவர்கள் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில், லாக்இன் செய்து பதிவு செய்தபின், விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்து, ஒவ்வொரு மாணவரின் கல்வித் தகுதி மற்றும் கடன் தேவைக்கு ஏற்ப விண்ணப்பிக்க வேண்டும்.




அரசு வழங்கும் வேறு எந்தத் திட்டத்தின் மூலமும் உதவித்தொகை பெறாதவர்கள் மட்டும், இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.7.5 லட்சம் வரை பிணை இல்லாத கடன் பெறலாம்.


குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் உள்ள மாணவர்கள் ரூ.10 லட்சம் வரை பிணையில்லாமல் கல்விக் கடன் பெறலாம்.


இந்தத் திட்டத்தின் கீழ் வாங்கும் கடனுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.
கடன்களுக்கான வட்டி விகிதங்கள் வங்கிக்கு வங்கி மாறுபடும். வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்தைப் பொறுத்து உங்களுக்கு ஏற்ற வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம்.



இந்தத் திட்டம் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக உள்ளது.
எனவே, கல்விக் கடன் வாங்க விரும்புவோர் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.

புதுச்சேரி மாணவர்கள் உயர் கல்வி பயில காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.




இதன்படி, எம்.பி.பி.எஸ்., 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய், பி.டெக்., படிப்பிற்கு 25 ஆயிரம் ரூபாய், நர்சிங் படிப்பிற்க 8 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகின்றது.


இது பெற்றோரின் பாதி சுமையை குறைகின்றது.இருப்பினும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சேர அதிக கல்வி கட்டணம் திரட்ட வேண்டி இருக்கும். இதற்கு பிரதமரின் கல்வி கடனுதவி திட்டம் கண்டிப்பாக கைகொடுக்கும்.


யாரெல்லாம் பயன் பெற முடியும்

என்.ஐ.ஆர்.எப் எனப்படும் தேசிய தரவரிசைப் பட்டியலில் முதல் 100 இடங்களைப் பிடிக்கும் அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கல்விக் கடன் அளிக்கப்படும். ஒட்டுமொத்த தரவரிசையில், பிரிவு வாரியான, துறை வாரியான தரவரிசையில் 100 இடங்களைப் பிடித்த கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.அதேபோல என்.ஐ.ஆர்.எப் தரவரிசையில் 101--200 வரை பிடித்த மாநிலக் கல்வி நிறுவனங்களில் படிப்போருக்கும் இந்தத் திட்டம் பொருந்தும். அதேபோல அனைத்து மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெறலாம்.

Advertisement