தாசரி குன்னத்துார் சாலை கனரக வாகனங்களால் நாசம்

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், தாசரி குன்னத்துார் கிராமத்திற்கு செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
தாசரி குன்னத்துார் சாலை 2016ல், பிரதம மந்திரி சாலை திட்டத்தில் அமைக்கப்பட்டது.
இச்சாலையில் தொடர்ந்து, ஜல்லி கற்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் அதிக அளவில் சென்று வருவதால், தற்போது கடுமையாக சேதமடைந்து, பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
இந்த சாலையில் பேருந்து வசதி இல்லாததால், பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். சாலை சேதமடைந்து உள்ளதால், அடிக்கடி ஜல்லி கற்கள் குத்தி 'டயர்'கள் பஞ்சராகி, வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். இச்சாலையில், மராமத்து பணிகள் கூட நடைபெறவில்லை.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சாலையில் உள்ள பள்ளங்களால் முதியவர்கள், கர்ப்பிணியர், நோயாளிகள் இந்த சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். ஆட்டோ, வாடகை கார் உள்ளிட்ட வாகனங்கள், இந்த கிராமத்திற்கு வர தயங்குகின்றன.
மேலும் இந்த சாலையில் மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்ச உணர்வுடனேயே சென்று வருகின்றனர்.
எனவே, இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.