லாரி மோதி தொழிலாளி பலி பெண்ணாடத்தில் சோகம்

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பெண்ணாடம், சோழன் நகரைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் விடுதலைச்செல்வன், 31; பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு பெண்ணாடம், கருங்கோழித்தோப்பு ரஷீத், 38; என்பவரின் பைக்கில் பெண்ணாடத்தில் இருந்து திட்டக்குடி மார்க்கமாக சென்றார்.
பைக்கை ரஷீத் ஓட்டினார். இறையூர் பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது, அவ்வழியே பின்னால் சிமென்ட் ஏற்றி வந்த லாரி திடீரென பைக் மீது மோதியது.
இதில், அவர்கள் காயமடைந்தனர். தகவலறிந்த பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் இருவரையும் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக அரியலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு இரவு 11:20 மணிக்கு சிகிச்சை பலனின்றி விடுதலைச்செல்வன் பரிதாபமாக இறந்தார். ரஷீத் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனர்.