பைக் டாக்சி ஊழியரிடம் நுாதன மோசடி

திருப்பூர்; திருப்பூரைச் சேர்ந்த 30 வயது நபர், டாக்சி மற்றும் பைக் டாக்சி இயக்கி வருகிறார். அவருக்கு ராஜேஷ் என்ற பெயரில் பைக் டாக்சிக்கு ஒரு சவாரி அழைப்பு புக்கிங் வந்தது. அரசு மருத்துவமனையிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்ல புக்கிங் செய்த அந்த வாடிக்கையாளரை அழைத்து செல்ல அவர் சென்றார்.

புக்கிங் செய்த நபர், தன்னை ராணுவ வீரர் என்றும், தன் மனைவி அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிறார்; அவர் ரயில்வே ஸ்டேஷன் செல்ல பைக் டாக்சி புக் செய்ததாகவும் போனில் கூறியுள்ளார். மனைவியின் மொபைல் போன் செயல்படவில்லை.

பைக்டாக்சி நபரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவதாகவும், அதை அவரது மனைவி வங்கி கணக்குக்கு அனுப்புமாறும் கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில், பைக் டாக்சி நபரின் மொபைல்போனுக்கு வங்கி கணக்கில் பணம் வந்ததாக மெசேஜ் வந்தது. ஆனால், அவரால் பணத்தை அனுப்ப முடியவில்லை. ராஜேஷ் கூறியவாறு மணி டிரான்ஸ்பர் கடை மூலம் பணம் அனுப்பியுள்ளார். அதன் பின்னர் தான், வங்கி கணக்கில் பணம் வந்ததாக வந்த மெசேஜ் போலி எனத் தெரிந்தது.

அந்த நபர் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அப்போது தான் பைக் டாக்சி நபருக்கு தான் மோசம் செய்யப்பட்டது தெரிந்தது.

Advertisement