தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நீதிமன்ற நிலுவை வழக்குகளில் ஆஜராகாமல் இருந்த தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டினார்.

கடலுார் மாவட்டத்தில் நிலுவை வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாத தலைமறைவு குற்றவாளிகளை கண்டறிய எஸ்.பி.,ஜெயக்குமார் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி.,கோடீஸ்வரன் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் தலைமையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், புஷ்பராஜ், செல்வகுமார் உள்ளிட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

குற்ற வழக்கில் 12 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த திருநெல்வேலி, பாளையங்கோட்டை சங்கர்ராஜா, கொலை வழக்கில் சேத்தியாதோப்பு அடுத்த வி.சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியவதி, ஆயுதம் மற்றும் வெடிமருந்து வழக்கில் நாகப்பட்டினம் சசிக்குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

இதேப் போன்று கலவர வழக்கில் பண்ருட்டி வீரப்பார் கிராமம் சிவக்குமார், சாராய வழக்கில் பெரம்பலுார் செல்லன், பாகூர் செந்தில்குமார், கலவர வழக்கில் தினேஷ், புதுப்பேட்டை காத்தமுத்து, கொலை வழக்கில் காஞ்சிபுரம் சிலம்பரசன் ஆகியோரை கைது செய்தனர். இதனையொட்டி எஸ்.பி.,ஜெயக்குமார், தனிப்படை போலீசாருக்கு சான்றிதழ் வழங்கினார்.

Advertisement